Saturday, May 03, 2008

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-1

(தமிழ் மொழியில் கிரந்த எழுத்து பயின்றுவருவது தொடர்பில் அவ்வப்போது பல்வேறு விவாதங்கள் எழுகின்றன. அவ்வாறான விவாதங்களுக்குத் தெளிந்த விளக்கமாக; முடிந்த முடிபாக இக்கட்டுரை அமையும். மலேசியாவில் 'உங்கள் குரல்' என்னும் மாதிகை (மாத இதழ்) ஆசிரியரும்; நற்றமிழ்க் கவிஞரும்; தொல்காப்பிய அறிஞருமாகிய நல்லார்க்கினியர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை மார்ச்சு 2008 'உங்கள் குரல்' இதழில் வெளிவந்தது.)

கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு) புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும் நூல்களிலும் மற்ற வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன. ஆகவே, கிரந்த எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில் இல்லாமல் இடையில் வந்த அந்த எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப் புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது.

பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ள மொழி தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன் தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும் தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவியலாது.

அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.

கிரந்த எழுத்து வேண்டுமென்பது ஏன்?

கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள் முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.

1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும் இலக்கியங்களையும் எதிர்கால மக்கள் படிப்பதற்கு உதவியாகக் கிரந்த எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.

2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன் எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை.

இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த இரண்டு காரணங்களையும் நடுநிலையோடு சிந்திக்கலாம்.

சமயச் சார்போடு வாழ்வதற்குக் கிரந்த எழுத்துத் தேவையா? (பாகம் 2-ஐத் தொடர்க..)

தொடர்பான கட்டுரை காண்க:- கிரந்தம் புகுந்தால் தமிழ் இறந்து போகுமா?

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-2



சமய நூல்களும் கிரந்த எழுத்தும்

கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க இயலாமற் போய்விடும் என்பது ஏற்புடைய கருத்தன்று. இதே நூல்களிலுள்ள கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக மாற்றப்பட்டாலும் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கொள்ளலாம். இதன் கதையும், இதில்வரும் இடப்பெயர்களும் ஆட்பெயர்களும் வடமொழி சார்ந்தவை. கம்பர் காலத்தில் கிரந்த எழுத்துகள் இருக்கவே செய்தன. இருந்தும், அறவே கிரந்த எழுத்துகள் இல்லாமல் ஏறத்தாழ பன்னீராயிரம் பாடல்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே கம்பர் பாடியுள்ளார். அதில் வந்திருக்க வேண்டிய கிரந்த எழுத்துகளுக்கு மாற்றாக தமிழ் எழுத்துகளே பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனால், அந்த இலக்கியத்தைப் படிப்பதிலும் சுவைப்பதிலும் எந்த சிறுதடையும் ஏற்பட்டுவிடவில்லை. இதுபோலவே, பிறமொழி ஒலிகளைக் கொண்ட எந்த நூலையும் தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி வெளியிட முடியும்; அவற்றைப் படித்துச் சுவைக்கவும் முடியும்.

சமயஞ்சார்ந்த பெயர்களும் கிரந்த எழுத்தும்

பல்வேறு சமயங்களைச் சார்ந்திருக்கும் தமிழர்கள் தங்கள் சமயஞ்சார்ந்து வைத்துக்கொண்டுள்ள பெயர்களை எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை என்ற கருத்தும் பொருந்துவதாய் இல்லை. கமபர் வடமொழிப் பெயர்களை ஆண்டிருப்பது போலவே, இப்போதும் பிறமொழிப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். (எ.கா: இராமன், இலக்குவன், சீதை, இராவணன், விபீடணன்) கம்பராமாயணத்தில் மட்டுமின்றி அரபு நாட்டில் பிறந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் பாடிய உமறுப் புலவரின் 5027 படல்களைக் கொண்ட சீறாக்காவியம் அறவே கிரந்த எழுத்துகள் இன்றித் தமிழ் எழுத்துகளாலேயே பாடப்பட்டுள்ளது. அதில் வரும் அரபுமொழிச் சொற்களும் பெயர்களும் தமிழ் எழுத்துகளாலேயே எழுதப்பட்டுள்ளன.

சமயஞ்சார்ந்த பெயரைத் தமிழில் எழுதலாம்

வடமொழிப் பெயர்களைத் தவிர்த்து நல்ல தமிழிலேயே பெயர்வைக்கும் விருப்பமும் போக்கும் மக்களிடையே வளர்ந்து வருகிறது. தமிழில் பெயரிடுவோம் என்ற கொள்கையுடன் பல இயக்கங்கள் அந்த மாற்றத்தை மேலும் வளர்த்தும் வலுப்படுத்தியும் வருகின்றன. எனவே, வடமொழிப் பெயர்களையே வைத்தாக வேண்டும் என்ற நிலை வருங்காலத்தில் முற்றாக மாறிவிடக்கூடும். சமய அடிப்படையிலான பெயர்களைக்கூட வடமொழி தவிர்த்து நல்ல தமிழில் வைக்க முடியும். கிருஷ்ணன் என்பதைக் கண்ணன் என்றும், விஷ்ணு என்பதை மாலவன் என்றும், லஷ்மி என்பதைத் திருமகள் என்றும், சரஸ்வதி என்பதைக் கலைமகள் என்றும் தமிழிலேயே வைத்துக்கொள்ள முடியும். ஷண்முகம் என்பதை ஆறுமுகம் என்றும், தட்சிணாமூர்த்தி என்பதை அருள்வேந்தன் என்றும் அதே பொருளில் மாற்றி வைத்துக் கொண்டவர்களும் உள்ளனர். எனவே, சமயஞ்சார்ந்து பெயர்வைக்கக் கிரந்த எழுத்துகள் கட்டாயத் தேவை அல்ல.

தமிழைத் தமிழாக்குவோம்

எனவே, உண்மைகளையும், தமிழ்நலனையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்த்து, தமிழில் உள்ள கிரந்த எழுத்து வழக்கைப் படிப்படியாக மாற்றித் தமிழைத் தமிழாகவே நிலநிறுத்தத் தமிழர் யாவரும் இன்றிணைந்து செயல்படுவதே நமது தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். பழகிப் போனதால் மாற்றம் சிறிது கடினமாகத் தோன்றலாம்; படிப்படியாகச் செய்தால் அது இயல்பாகிவிடும்; இனிதுமாகிவிடும்.

தவிர, பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்குக் கிரந்த எழுத்து மிகவும் தேவை எனச் சிலர் எண்ணுகிறார்களே, அதற்கு என்ன விளக்கம்? (பாகம் 3-ஐத் தொடர்க..)
கிரந்தம் தொடர்பான கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-3


பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா?

உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக் கொண்டு எந்த அளவுக்குப் பிறமொழிச் சொற்களை அவற்றுக்கு நெருக்கமான ஒலிகளூடன் எழுத முடியுமோ அந்த அளவே எழுத முடியும். பிறமொழிச் சொற்களின் சரியான ஒலிப்பைப் பாதுகாப்பதற்காக, எந்த மொழியினரும் தம் மொழி இலக்கணத்தையும் மரபையும் மாற்றிக் கொள்வதோ அல்லது இல்லாத புதிய எழுத்துகளை உருவாக்கிக் கொள்வதோ ஒருபோதும் இல்லை.

காரணம், தங்கள் மொழியின் இலக்கண வரம்புகளையும் மரபுகளையும் சிதைத்துவிட்டு, பிறமொழி ஒலிப்பைச் சரியாகப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிற மனப்போக்கே எதிர்மறையானதாகும். பிறமொழி ஒலிக்காக நமது மொழியைச் சிதைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பிறமொழிக்குரியவர்களே விரும்பவோ எதிர்பார்க்கவோ மாட்டார்கள். அவர்களே எதிர்பார்க்காத மதிப்பை, நமது சொந்த மதிப்பைக் கெடுத்தாகிலும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று எண்ணுவது உண்மையில் மிகக் கடுமையான தாழ்வு மனப்பான்மையாகும். தன்மதிப்புள்ள எவரும் இதனை ஏற்கமாட்டார்.

பிறமொழி ஒலிகள் எப்படி எழுதப்படுகின்றன?


தமிழ் என்ற சொல்லை உலகப் பெருமொழியான ஆங்கிலத்தில் 'டமில்' (Tamil) என்றுதான் எழுதமுடியும். அவர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள். அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை; நாமும் அதனைக் குறையாகக் கருதுவதில்லை. அரபு மொழியில் எகர ஒகரங்கள் இல்லை. எனவே, அந்த மொழியில் அமெரிக்கா, மலேசியா என்ற நாட்டுப் பெயர்களை ஒலிப்பு மாறாமல் எழுத முடியாது. அரபியர்கள் இவற்றை 'அமிரிக்கா' என்றும் மலீசியா என்றுந்தான் எழுதுகிறார்கள். இதற்காக, அரபியர்கள் கலவைப்படுவதில்லை.

எனவே, எந்த மொழியும் எந்த மொழிக்காகவும் செய்யாத இந்த வேலையை, நாம் நம் தமிழ்மொழியைச் சிதைத்தாவது மற்ற மொழிகளுக்காகச் செய்யவேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய கருத்தாகும்.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டதும் கூட சமற்கிருத வேதமொழிகளைத் தமிழில் ஒலிபெயர்ப்பதற்கே அன்றி, பொதுப்பயனீட்டுக்காக அன்று. அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப் புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை. அதற்குப் பிறகும், உமறுப் புலவர், சேகனாப் புலவர், வீரமாமுனிவர் போன்ற பலரும் கிரந்த எழுத்தை ஆளவில்லை. கடந்த 3 நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும் இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.

எனவே, கட்டாயத் தேவையின்றியும், பிறமொழியினரே எதிர்பார்க்காத ஒன்றைப் பிறமொழிக்குச் செய்யும் வேண்டாத முயற்சிக்காகவும், அப்படியே முயன்றாலும் அதனை முழுமையாகச் செய்யவியலாத நிலையிலும்; நம் தமிழ்மொழியின் அமைப்பையும் செம்மையையும் கெடுக்கலாம் – கெடுக்க வேண்டும் என்று எண்ணுவதும்; அதற்காக வாதமும் பிடிவாதமும் செய்வது சரியன்று.

வழக்கிலிருக்கும் கிரந்த எழுத்துப் பயனீட்டைக் குறைக்கும் முயற்சியில் தமிழுணர்வாளர்கள் ஈடுபட்டுள்ள காலத்தில், அவற்றை வலிந்து மேலும் திணிக்க முயல்வது, அதிலும் குறிப்பாகத் தமிழ்க் கல்வியாளர்கள் அவ்வாறு செய்வது ஆக்கமான நடவடிக்கையன்று. அது, வீண் குழப்பத்துக்கும் வேற்றுமைக்கும் போராட்டத்துக்குமே வழிவகுக்கும்.

ஆனாலும், தொல்காபியக் காலத்திலேயே வடசொல்லும் கிரந்தமும் தமிழில் கந்துவிட்டதே.. எப்படி? (பாகம் 4-ஐத் தொடர்க..)

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம் 4

கிரந்த எழுத்து பற்றி தமிழ் இலக்கணம்?

தொல்காப்பியரே வடசொல்லைப் பயன்படுத்த வேண்டித்தானே, அதற்கு வழிகாட்டும் நூற்பாவை இயற்றியுள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள். இது, நுனிப்புல் மேய்ந்ததொரு கருத்து. தொல்காப்பியர் வடசொல்லைப் பயன்படுத்துமாறு எங்கும் கூறவில்லை.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்ற அவரது நூற்பாவின் பொருள்:-
வடசொல் என்பது வட எழுத்தை (ஒலியை) முற்றும் நீங்கித் தமிழ் எழுத்துகளால் உருவான சொல்லே என்பதுதான். பிறமொழிச் சொல்லை எப்படித் தமிழில் எழுதுவது என்று கூறியதை பிறமொழிச் சொல்லை தமிழில் கலக்கவேண்டும் என்று கூறியதாகக் கொள்வது கதைத்திரித்தல் ஆகும்.

நமக்கு பிறமொழிப் பேசும் மக்களுடன் தொடர்பு ஏற்பட்டால் அந்த மக்களது பெயர்களையும் அவர்கள் தங்கள் மொழியில் வைத்துள்ள இடப்பெயர்களையும் எழுதும் தேவையும் ஏற்படவே செய்யும். அந்தப் பெயர்கள் நமது மொழியில் இல்லாத ஒலிகளைக் கொண்டிருக்கலாம். எனவே, அந்த மொழிப் பெயர்களை நமது மொழியில் எழுத ஒரு முறையை வகுத்துரைப்பது இக்கணியின் கடமையாகும்.

எனவேதான், தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழில் எழுதும் முறையை வழங்கினார். ஆனால், இந்த நூற்பாவின் தெளிவான செய்தி பிறமொழிச் சொல்லைத் தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துகளால் தமிழ் இலக்கணப்படி புணர்ந்து எழுத வேண்டும் என்பதே. கிரந்த எழுத்தாக்கம் போன்ற நடவடிக்கையைத் தொல்காப்பியர் முன்னறிந்து தடுத்திருக்கிறார் என்பதே உண்மை. இதையும் மீறி கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து உருவானது.

நன்னூல் என்ன சொல்கிறது?

கிரந்த எழுத்து உருவாகி 6 நூற்றாண்டு கடந்து கி.பி12ஆம் நூற்றாண்டில் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவரும் வடசொல்லத் தற்சமம் (ஒலிமாறாமல் தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றும்; தற்பவம் (ஒலி மாற்றி தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றுதான் பிரித்து இலக்கணம் வகுத்தாரே அன்றி, அப்போதிருந்த கிரந்த எழுத்தைப் பயன்படுத்தும்படியோ, பயன்படுத்தும் முறையையோ கூறவில்லை.

தற்சமம், தற்பவம் என்றால் என்ன?

தமிழிலும் சமற்கிருதத்திலும் உள்ள பொதுவான எழுத்தொலிகளைக் கொண்ட அதாவது ஒலிக்காக எழுத்துகளை மாற்றத் தேவையில்லாத சமற்கிருதச் சொற்களே தற்சமம் எனப்படும். தமிழிலும் சமற்கிருதத்திலும் சமமான ஒலிகளைக் கொண்ட எழுத்துகளால் ஆன சொற்கள் என்பது இதன் கருத்து.

தமிழில் இல்லாத சமற்கிருதத்தில் மட்டும் உள்ள எழுத்தொலிகள் கொண்ட சமற்கிருதச் சொற்களில் உள்ள சமற்கிருத ஒலிகளை மாற்றி தமிழ் எழுத்துகளையே கொண்டு எழுதப்படும் சொற்களே தற்பவம் எனப்படும். தமிழில் இல்லாத சமற்கிருத ஒலிகளுக்கு ஈடாகத் தமிழ் ஒலிகள் பாவிக்கப்பட்ட சொற்கள் என்பது கருத்து.

தற்சமம், தற்பவம் ஆகிய இரண்டிலுமே கிரந்த எழுத்து வராது. கமலம், கல்யாணம் போன்ற வட சொற்கள் எழுத்தொலி மாற்றப்பட்டாமையால் இவை தற்சமம் ஆகும். வருடம், புட்பம் போன்ற வடச்சொற்களில் உள்ள சமற்கிருத ஒலி தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டிருப்பதால் இவை தற்பவம் ஆகும்.

மனமார்ந்த நன்றிக்குரியவர்: -
நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள்
'உங்கள் குரல்' 2008 மார்ச்சு மாத இதழ்
மலேசியா.
கிரந்தம் புகுந்தால் தமிழ் இறந்து போகுமா? மேலும் படிக்க.. இங்கே சொடுக்கவும்

Friday, May 02, 2008

தூயதமிழ்க் காப்பின் உண்மை நிலைகள்

வடமொழி தேவமொழி என்றும் அம் மொழியையும் அதன் சொற்களையும் வழங்குவது இறைவனும் விரும்பும் ஏற்றம் என்றும் தவறான கருத்து வலிவாகப் பரப்பப் பட்டதால் வரைதுறையின்றி வடமொழிச் சொற்களை எவ்வகை எதிர்ப்புமின்றிக் கண்டமண்டலமாகத் தமிழில் கலந்தெழுதும் நிலையேற்பட்டது. இந்நிலையால், தமிழினுடைய தூய்மையும் வளமுங் கெடவும் பெரும்பேரளவிலான தமிழ்ச் சொற்கள் பொருளிழக்கவும் வழக்கொழியவும் நேர்ந்தது.
  • நன்றாக எளிதில் புரியக்கூடிய பொருத்தமான தமிழ்ச்சொற்களை விலக்கி, அரிதான, விளங்காத, சரியாகப் பொருந்தாத வடசொற்கள் வலிய திணித்துக் கலக்கப்பட்டதற்கான சில சான்றுகளைப் பாருங்கள்: தொடர்ந்து படிக்கவும்...
நன்றி : தமிழநம்பி

Tuesday, April 29, 2008

பாவேந்தர் பாரதிதாசனார்

(29-4-2008ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசனார் தமிழரிடையே தமிழ் மண்ணில் பிறந்த நினைவு நாள். அவருடைய நினைவேந்தலாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது)



பாரதிதாசன்....! உண்மைத் தமிழ் உணர்வாளர்களுக்கு நன்கு பழகிய பெயர். தமிழர் உள்ளங்களிலும் நாவிலும் என்றென்றும் நிலவிவரும் தமிழ் உரு ஒன்றின் சொல்லுருவம் அது!

"கவி எப்படி உருவாகிறான் என்பது பற்றி எழுதியிருக்கிறேன். அதில் பாரதிதாசனைத் தான் உவமையாகக் காட்டியிருக்கிறேன். என் கவிதை மண்டலத்தில் பாரதிதாசன் ஒரு பகுதி" புரட்சிக்கவி பற்றி மகாகவி பாரதி எழுதியிருக்கிறார்.

"முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதி போல தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசன் கவிதை தோன்றியுள்ளது. புரட்சிக் கருத்துகள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்து முதுமைக் கவிதைகளாக வெளிவருகின்றன" என பேரறிஞர் அண்ணா பாவேந்தரைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

எனக்குக் குயிலின் பாடலும்; மயிலின் ஆடலும்; வண்டின் யாழும்; அருவியின் முழவும் −னிக்கும்; பாரதிதாசன் பாட்டும் −னிக்கும்' என மொழிகின்றார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

''பழமை - மதவாதம் - ஆசாரம் ஆகியவற்றில் ஊறிக் கிடந்த தமிழ்மக்களிடையே அவருடைய பாடல்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆதலால் −வரைப் புரட்சிக்கவி எனலாம். அமெரிக்கா கண்ட புரட்சிக்கவி வால்ட் விட்மன் போல் தமிழ்நாடு கண்ட புரட்சிக்கவி பாரதிதாசன்'' எனக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.


''மாபாவலன் பாரதியார் −ன்று நமக்கு வைத்து விட்டுப் போன சொத்துக்கள் பல. அவற்றுள் முகாமையாவை ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியனவும் கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசனும்'' எனக் குறிப்பிடுகிறார் புதுமைப்பித்தன்.

''நிமிர்ந்த பார்வை, அச்சமில்லை என்று பறைசாற்றும் முறுக்கான மீசை, வயதை விழுங்கிய வாலிப வீறு, உணர்ச்சி பொங்கும் பேச்சு, புதுமை வேட்கை கொண்ட உள்ளம் ஆகியவற்றின் கலவையே பாரதிதாசனார்'' என முழங்குகிறார் சுத்தானந்த பாரதியார்.

பாரதிதாசனின் உள்ளத்தில் பொங்கி எழுந்த பாவுணர்வு தமிழர் விடுதலை நோக்கிப் புதுவழியில் நடையிடல் ஆயிற்று! அது புரட்சி மனப்பாங்கு வாய்ந்தது! எனவேதான், பாரதிக்கு வாய்க்காத புரட்சிப் பாவலர் என்ற பட்டம் பாரதிதாசனுக்கு மக்களால் கொடுக்கப்பெற்றது என்று எழுதுகிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

''புரட்சிகரமான கருத்துக்களைத் துணிவோடு வெளிப்படுத்திய முதல் கவியும் கடைசிக் கவிஞரும் பாரதிதாசனார் ஒருவரே. அவருக்குப் பிறகு அவருக்கு ஈடாக வேறு எந்தக் கவிஞரும் இதுவரை தோன்றவேயில்லை. அவ்வாறு தோன்றியவர்களும் பழமைக் கருத்துக்களைக் கொண்டவர்களாகவே உள்ளனர். பாரதிதாசன் போல புரட்சிக் கவிஞர்கள் தோன்றியிருந்தால், கடந்த இரண்டு மூன்றாயிரம் ஆண்டுக்காலமாக தமிழரிடையே இழிவுகளும் இன்னல்களும் −ருந்திருக்குமா?'' எனக் கேள்வி கேட்கின்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.



இப்படியாக, தமிழகத்தின் மிகச் சிறந்த அறிஞர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் விளங்கிய பலரும் பாரதிதாசனின் வரலாற்றுச் சிறப்பு எத்தகையது என்பதைக் கூறிச் சென்றுள்ளனர்.

ஏறத்தாழ எழுபத்து நான்காண்டுகள் வாழ்ந்து, செந்தமிழ்க்கும் தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லரிய தொண்டுசெய்து, எண்ணற்ற பாமணிகளை வாரி வழங்கி, தமிழே மூச்சாய், வாழ்வாய், இன்பமாய் இருந்தவர் பாரதிதாசன் என்னும் புனைப்பெயர் கொண்ட திரு.கனக.சுப்புரத்தினம். அவர் 1891, ஏப்பிரல் 29ஆம் நாள் புதுவையில் பிறந்தார்.

'நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்' என்று தம் தோற்றத்தை விளக்கும் அவ்வரிய தமிழ்ப்பாவேந்தர், வெறும் பாரதிதாசனாக இல்லாமல், தமிழ்ப்புரட்சி செய்த முதல் புரட்சிப் பாவலராய் தமிழகத்திடையே வாழ்ந்து வந்தார். அவர் வரலாறு தமிழரின் மறுமலர்ச்சி வரலாறாகும்; தமிழ்நாட்டின் உணர்வெழுச்சிக் கதையாகும்; தமிழர்தம் மான உணர்வுக்குக் கலங்கரை விளக்காகும்.

பாரதியாரின் உள்ளம் இந்திய நாட்டு விடுதலையை எதிர்நோக்கிப் பாடியபொழுது, பாரதிதாசன் தமிழ்நாட்டு விடுதலைக்கெனக் குரல்கொடுத்தார். தமிழ்மக்களின் ஆறாத் துயரும் அவல நிலையும் பாரதிதாசனின் உள்ளத்தில் ஒரு புத்தெழுச்சியை உண்டாக்கின. இதன் பயனாக, தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உழைப்பது ஒன்றே தம் வாழ்வென வரையறுத்துக் கொண்டார்.

"எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தனையீன்ற தமிழ்நாட்டு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்,
செத்தொழியும் நாள்எனக்குத் திருநாளாகும்" என்பது அவர் கூற்று. இப்புரட்சி மனப்பான்மையால் இவர் பெற்ற துயரங்கள் பலப்பல. இவர் பெறாத நன்மைகள் கோடி. இருப்பினும் 'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்று தம்மைத் தாமே தேற்றிக் கொள்கிறார்.

தமிழன் உய்வுக்கும் வாழ்வுக்கும் அடிப்படையாக நிற்பது தமிழே என்றுகூறித் தமிழ் இளைஞர் தமக்கு இவர் ஊக்கம் கொடுப்பதைப்போல் வேறு எந்தப் புலவரும் செய்ததில்லை.

"உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு
நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்,
நரம்பெல்லாம் இரும்பாகி
நனவெல்லாம் உணர்வாகி
நண்ணி டாரோ" என்றும், "வண்டமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும்?" என்றும் தமிழ் உணர்வை ஊட்டினார். "சான்றாண்மை இவ்வுலகில் தோன்றத் துளிர்த்த தமிழை" அவர் காதலித்தது போல் கம்பனும் காதலிக்கவில்லை. தமிழே அவர் உயிர்! மூச்சு! அவர் தமிழின் உருவம்!

"தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்." என்று தமிழர்க்கும் தமிழ்ப்புலவர்க்கும் இருக்கவேண்டிய மொழி, இன நலனையும் கடமையையும் எடுத்துக்கூறினார்.

"பங்கம் விளைத்திடில் தாய்மொழிக்கே - உடல் பச்சை ரத்தம் பரிமா றிடுவோம்" என்று தீப்பொறி பறக்கும் தமிழ் உணர்ச்சியைத் தமிழரிடையே விதைத்து தமிழ்; தமிழர் விடுதலைக்கு வித்திட்ட விடுதலைப் பாவலர் தமிழக வரலாற்றில் பாவேந்தர் ஒருவரே. இவ்வுலகிடை தமிழும் தமிழரும் நிலைத்திருக்கும் காலம் முழுமைக்கும் பாவேந்தர் பாரதிதாசனாரின் புகழ் மறையாதிருக்கும்; உண்மைத் தமிழர் அவரை மறவாதிருப்பர்.

Monday, April 28, 2008

தனித்தமிழ் பற்றிய ஐயங்களும் தெளிவுகளும்

  • தனித்தமிழ் என்றால் என்ன?
  • தனித்தமிழ் ஏன்? எதற்கு?
  • தனித்தமிழின் வரலாறு யாது?
  • தனித்தமிழ் வெற்றி பெற்றுள்ளதா?
  • தற்காலத்திற்குத் தனித்தமிழ் பொருந்துமா?
  • தனித்தமிழ் தமிழர்க்கு ஆக்கத்தைத் தருமா?

இப்படியாகத் தனித்தமிழ் பற்றிய பல்வேறு ஐயங்கங்கள் தமிழரிடையே நிலவி வருகின்றன. குறிப்பாக, தமிழ்க் கற்றோர், கற்பிப்போரிடையே இத்தகைய ஐயப்பாடுகள் நிலவி வருவது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. நமது மலேசியத் திருநாட்டில் தமிழ்மொழிச் சார்ந்திருக்கும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்வி அதிகாரிகள், பாடநூலாசிரியர்கள், எழுத்தாளர்கள், பாவலர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் 'தனித்தமிழ்' என்பதைப் பெரும்பாலும் தவறாகவே உணர்த்துள்ளனர்; தப்புத் தப்பாகவே அறிந்துள்ளனர்.

'தனித்தமிழ்' என்பதை உண்மையாகவே புரிந்து கொண்டிருப்பவர்கள் மிகக் குறைவானவர்களே ஆவர். அவ்வாறு புரிந்தவர்கள்; அறிந்தவர்கள்; உணர்ந்தவர்கள் 'தனித்தமிழைப்' பற்றி பேசுகின்ற, எழுதுகின்ற, முன்வைக்கின்ற கருத்துகள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மலேசியாவில் நாம் கண்டுவந்திருகின்ற வரலாறாகும்.

தனித்தமிழை முன்னெடுப்பவர்கள் 'தமிழ் வெறியர்கள்' என முத்திரைக் குத்தப்படுகிறது. ஆட்சி அதிகார பலம் பெற்றவர்களால் தனித்தமிழ் நயவஞ்சகமாக ஓரங்கட்டப்படுகிறது. தனித்தமிழ் பண்டிதர்களுக்கே சொந்தமானது என்ற தவறான கருத்து வலிந்து பரப்பப்படுகிறது. தனித்தமிழ் மாணவர்களுக்குப் புரியாது என்றும் அவர்களின் சிந்தனையாற்றலை மட்டுப்படுத்தும் என்றும் பொய்ப் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. தனித்தமிழைப் பற்றிய நம்பிக்கையின்மை தமிழ்ப்பகைவர்களால் மட்டுமின்றி தமிழ்க் கற்றோர்களாலும் விதைக்கப்படுகின்றன.

தனிதமிழை மிகக் கோரமாகப் படம்பிடித்துக் கட்டுபவர்கள் தயவுகூர்ந்து தங்களின் அவதூறுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். தனித்தமிழ் மீதுள்ள தவறான கண்ணோட்டத்தைக் கற்றோர்கள் அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும். தனித்தமிழ் கடுமையானது என்ற பொய்களை தலைமுழுக வேண்டும். தனித்தமிழ் தேவையற்றது என்ற நம்பிக்கையின்மையை விட்டொழிக்க வேண்டும்.

தனித்தமிழ் பற்றிய ஐயங்களுக்கு உண்மையான தெளிவுகளைப் பெற வேண்டும்.

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்ற வள்ளுவப் பேராசானின் வாய்மொழிக்கு ஏற்ப தனித்தமிழ் பற்றிய தெளிவுகளை நடுநிலையோடும் ஆய்வுநோக்கோடும் ஆராய்ந்துபார்த்து முடிவெடுக்க வேண்டும். தனித்தமிழ் என்பது தனியான ஒரு தமிழ் அல்ல; தனித்தமிழ் என்பது தமிழ்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

அதற்கு, 'நயனம்' என்ற வலைப்பதிவில் தமிழன்பர் நாக.இளங்கோவன் அவர்கள் எழுதியுள்ள பின்வரும் செய்திகள் மிகுந்த பயனாக அமையும். திருத்தமிழ் அன்பர்கள் கண்டிப்பாகப் பின்வரும் கட்டுரைகளைப் படிக்க வேண்டுமென அன்புடன் விழைகிறேன்.

1. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 1)

2. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 2)

3. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 3)

4. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 4)

Monday, April 21, 2008

தமிழவேள் கோ.சாரங்கபாணி


(20.4.2008ஆம் நாள் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் பிறந்தநாள். அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.)


கோ.சா என்று அழைக்கப்படும் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி சிங்கை, மலாயாவில் தமிழும் தமிழரும் நிலைப்பெற்று இருப்பதற்கு தன்னையே ஈகப்படுத்திக் கொண்ட வரலாற்று நாயகர்.

தமிழவேள் கோ.சாரங்கபாணி தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் 20-04-1903ல் பிறந்து தமது 21ஆம் வயதில் 1924ல் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரிலும் பின்னர் மலாயாவிலும் தமிழர் திருநாள் கண்டவர். அப்போதைய மலாயா சிங்கப்பூரில் பல வகையிலும் தமிழ்த் தொண்டாற்றினார்.

மலாயாவில் வாழ்ந்த தமிழர்கள் குடியுரிமை பெற்றவர்களாக வாழவும், தாய்மொழியாம் தமிழோடு தமிழ்க் கலை இலக்கியத்தைப் போற்றி வளர்த்தெடுக்கவும் வேண்டி பல்லாற்றானும் பாடாற்றியவர்.

பிரிட்டிசாரின் காலனித்துவ ஆட்சியின்போது மலாயா இரப்பர் தோட்டங்களில் தொழிலாளிகளாக இருந்த தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு மனம் பொறுக்காமல் கொதித்தெழுத்து தமிழர் சீர்திருத்த சங்கத்தின்வழி போராடியவர்.

தமிழ் முரசு என்ற நாளிதழைத் தொடங்கி மலாயாவிலும் சிங்கையிலும் தமிழியச் சிந்தனைகள் பரவுவதற்கும் தமிழர் விழுமியங்கள் நிலைபெறவும் ஓயாது உழைத்து வெற்றி கண்டவர். மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டவராகவும், தமிழர் நலமொன்றையே மேலாகக் கருதியவராகவும் திகழந்தார். தமிழ் முரசு நாளிதழ் வழியாகவே எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார். இதன் வழியாக ஆயிரமாயிரம் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், பேச்சாளர்களையும், சிந்தனையாளர்களையும் உருவாக்கிக் காட்டினார். தமிழகத்திலிருந்து மிகச் சிறந்த அறிஞர்களையும் சான்றோர்களையும் தலைவர்களையும் அழைத்துவந்து நாடுதழுவிய நிலையில் தமிழர்களிடையே தமிழ் உணர்வை ஊட்டி மாபெரும் தமிழ் எழுச்சியை ஏற்படுத்தினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955ல் கோலாலம்பூர் வந்திருந்தபோது கோ.சா அவர்களுக்கு “தமிழவேள்” எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார்.

அனைத்திற்கும் மேலாக, மாலாயாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ்மொழிக் கல்வி நிலைப்பதற்கு மிக உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியவர் அமரர் கோ.சா என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ள வரலாறு. மலாயாவில் முதன் முதலாகப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோது அதில் சமற்கிருத மொழியைப் பாட மொழியாக வைக்கவேண்டும் என பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி பரிந்துரை செய்தார். ஆனால், அமரர் கோ.சா இந்தப் பரிந்துரையை மிகத் தீவிரமாக எதிர்த்தார். பல்கலைக்கழகத்தில் தமிழயே வைக்கவேண்டும் என்று போராடினார்.

பல்கலைக்கழகத்தில் தமிழை இடம்பெறச் செய்வதற்காக ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற நிதித்திட்டத்தைத் தொடங்கி நாடுமுழுவதும் சுற்றித்திரிந்து பணத்தைத் திரட்டி தமிழைக் காப்பாற்றிய பெருமகனார் இவராவார். இவருடைய அயராத உழைப்பின் பயனாகவும் தமிழ்மக்கள் ஒன்றுதிரண்டு வழங்கிய ஆதரவினாலும் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழை முதல் மொழியாகக் கொண்ட இந்திய ஆய்வியல் துறை அமைந்தது.

'தமிழர் திருநாள்' என்ற பெயரில் மாபெரும் தமிழ்; தமிழர் எழுச்சிப் பெருவிழாவினை ஏற்படுத்தி மலாயாவில்(மலேசியாவில்) வாழும் தமிழர்களிடையே மாபெரும் தமிழ் அறிவையும் தமிழ் உணர்வையும் தமிழின எழுச்சியையும் ஏற்படுத்தி, இன்றளவும் தமிழும் தமிழரும் தங்களின் தாய்மொழி உரிமையோடு வாழ்வதற்குரிய வாழ்வாதாரத்தை வழங்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணி என்னும் அந்த மொழி, இனநலச் சான்றோன் பொன்னடிகளை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் போற்றிக் கும்பிட வேண்டும்.

Monday, April 14, 2008

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1


முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.

மாந்