2012 கல்வியாண்டில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து போனதற்குக் காரணம் என்ன?

Wednesday, May 30, 2012

ஈப்போவில் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு


பேரா மாநிலத்தில் உள்ள சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில், மலேசியாவில் முதன் முறையாக ‘தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு’ ஈப்போவில் இன்று 30.5.2012ஆம் தொடங்கியது. 30 - 31 மே 2012 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகின்றது.

மலேசியா மட்டுமின்றி இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஏறக்குறைய 200 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்க்கல்வி, தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் தொடர்பாக ஏறக்குறைய 32 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் படைக்கப்படுகின்றன.

மலேசியாவில் தமிழ்க்கல்வியை முன்படுத்தி முதன் முறையாக நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசியர்கள் ஆகியோர் திரளாக வந்து கலந்துகொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ் ஆசிரியர்களிடையே நல்லதொரு சிந்தனை மாற்றம் ஏற்பட்டு வருவதை இதன்வழி அறியமுடிகிறது.

முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி
ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல் சிக்கலைக் களையவும், தங்கள் பணித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடைபெறுவதாக இதன் ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி தெரிவித்தார்.

தொடக்க நாளான இன்று முதலாவதாக முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் ‘கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்’ என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை படைத்தார். அவரைத் தொடர்ந்து உப்சி (UPSI) பல்கலைக்கழக விரிவுரைஞர் முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி ‘ஒவ்வோர் ஆசிரியரும் ஓர் ஆய்வாளர்’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தளித்தார்.

இன்றைய நாளில் மட்டும் மூன்று அரங்குகளில் மொத்தம் 15 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகள் அனைத்து நூல்வடிவில் ஆய்வடங்கலாக அனைத்துப் பேராளர்களும் வழங்கப்பட்டுள்ளது.






தமிழ்நாடு, சிங்கப்பூர் பேராளர்கள் படைத்த கட்டுரைகள் பலருடைய கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக அமைந்த தருணத்தில், மலேசியக் கல்வியாளர்களின் கட்டுரைகளும் கற்றல் கற்பித்தல் தொடர்பான பல்வேறு கூறுகளை அலசி ஆராயும் வகையில் அமைந்திருந்தன.

நமது நாட்டுச் சூழலில் தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ்க்கல்வி வளர்ச்சி, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம் ஆகியவை பற்றியெல்லாம் ஆய்வுகளை நடத்தி சிறப்பாகப் படைத்தளிக்க முடியும் என்பதை இந்த மாநாடு உறுதிபடுத்தியுள்ளது என்றால் மிகையன்று.

கல்வியியல் துறையில் சிகரங்களைத் தொடுவதற்கு நமது ஆசிரியர்கள் தங்கள் கரங்களை நீட்டி மேலெறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த மாநாட்டில் நேரடியாகக் காண முடிந்தது.

இந்த மாநாட்டில் கட்டுரை படைத்த மலேசியக் கல்வியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ‘திருத்தமிழ்’ மனமார்ந்த பாராட்டையும் நல்வாழ்த்தையும் பதிவுசெய்வதில் மகிழ்ச்சி கொள்கிறது.

விரிவுரைஞர் மன்னர் மன்னன்
திரு.வேல்முருகன் - சிங்கை
திருமதி தனலெட்சுமி
விரிவுரைஞர் திரு.மோகன் குமார்
ஆசிரியர் திரு.வாசுதேவன் இலெட்சுமணன்
 
@சுப.நற்குணன், திருத்தமிழ்
 

Monday, May 28, 2012

உலகத்தின் முதல் மொழி எதுவாக இருக்கும்?


பிலேடியன்  (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர். 

உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது. மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள். 

மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர். உலகில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கி உள்ளனர். இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார். பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார். நிகழ்ப்பட  இணைப்பைப் பாருங்கள்.



தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்.  

நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ:-
1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.

2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.

3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.

4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு(தெலுங்கு), தா(இலத்தின்)]
5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)

6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.

8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.

10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல். [எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]

இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது  அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்.  

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Thursday, May 24, 2012

UPSI:- தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு


பேரா, தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைகழக மொழி தொடர்புத்துறை புலம், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழக ஆதரவோடு மலேசிய நாட்டில் முதன் முறையாக ‘தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு’ நடத்தவுள்ளது.

இம்மாநாடு எதிர்வரும் 2012, மே திங்கள் 30 - 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு ஈப்போ மாநகரில் உள்ள இல் சிட்டி தங்கும் விடுதியில் (Hillcity Hotel) நடைபெறும்.

மாநாட்டு நோக்கம்:-

தமிழ்க் கல்வியாளர்களும் ஆய்வாளர்களும் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைக்கும் ஒரு தளமாக இந்த மாநாடு அமையவுள்ளது. தமிழ் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் தங்கள் புலமைத் திறம், பட்டறிவு, கற்றல் கற்பித்தல் திறன் முதலானவை தொடர்பில் கலந்துரையாடி தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, புதிய இலக்குகளை நோக்கி இணைந்து செயல்பட ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் படைக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் ‘தமிழ்க் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்’ எனும் கருப்பொருளில் அமைந்திருக்கும். மொத்தம் 32 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. வெளிநாட்டு ஆய்வாளர்களோடு உள்நாட்டுக் கல்வியாளர்களும் அருமைவாய்ந்த கட்டுரைகளைப் படைப்பார்கள்.

தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்காற்றும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியத் தமிழ்க் கவியாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

மாநாட்டுக் கட்டணம் :-

உள்நாட்டுப் பேராளர்கள்:- RM200.00 (தங்கும் வசதி உண்டு) / RM150.00 (தங்கும் வசதி இல்லை )

வெளிநாட்டுப் பேராளர்கள்:- USD100.00

மாநாட்டுக் கட்டணத்தை உப்சி பல்கலைகழகப் பொருளகக் கணக்கில் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். அதன் விவரம் பின்வருமாறு:-

 Bank Islam - Account Number:- 08068010003264

பொருளகத்தில் பணத்தைச் சேர்த்தவுடன் அதன் சான்றுச் சீட்டை (Bank Slip) பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

TERC 2012 Secritariat, Faculty Of Languages and Communication,
Sultan Idris Education University, 35900 Tanjung Malim, Perak, Malaysia.
(Attn: Dr.S.Samikkanu Jabamoney) Fax:-6054583603

பேராளர்களுக்கு மாநாட்டுப் பை, மாநாட்டு மலர், தங்கும் வசதி, உணவு ஆகிய அனைத்தும் செய்து தரப்படும்.

மாநாடு தொடர்பான மேல்விவரங்களுக்கும் தொடர்புக்கும்:
முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி (கைபேசி:- 6012-5275943) மின்னஞ்சல்:- samjabarose@yahoo.com.my

தமிழ்க்கல்வியையும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலையும் முன்னிருத்தி மலேசியாவில் முதன்முறையாக  நடைபெறும் இந்த மாநாட்டில் மலேசியக் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு செய்ய வேண்டும். அறிவு சார்ந்த மாநாடுகளும் கல்வியியல் தொடர்பான மாநாடுகளும் தொடர்ந்து நடைபெறுவதற்கு இந்த மாநாடு ஒரு படிக்கல்லாக அமையட்டும். மலேசியத் தமிழ்க் கல்வியாளர் சமூகத்தில் ஆய்வுப்  பண்பாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் உருவாகி வளர்ச்சிபெற இந்த மாநாடு ஒரு தொடக்கமாக - தோற்றுவாயாக இருக்கட்டும்.

வாருங்கள் நண்பர்களே, ஆசிரியர்களே, மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களே.. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பாக அனைவரும் ஒன்றுகூடி அறிவு சார்ந்த நிலையில் பேசுவோம்; ஆய்வு சார்ந்த நிலையில் சிந்திப்போம்; ஆராய்ச்சி நோக்கோடு முன்னேறுவோம். சமூகம் மாற முதலில் நாம் மாறுவோம். தமிழ்ச் சமூகத்தின் மறுமலர்ச்சி  நம்மிடமிருந்து தொடங்கட்டும்.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Friday, April 27, 2012

தமிழ்ப் புத்தாண்டு காப்புக்குழு நிறுவப்பட்டது



கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, காதல், வீரம், பெருமை பேசிக் கலைவதை வாடிக்கையாக்கிய தமிழன், தான் செய்த சாதனையை ஆவணப்படுத்துவதை கைக்கொள்ளாததால்தான் வந்தேறிகளுக்கு நல்ல வாய்ப்பாகப் போய் வசைபாட வசதியாகப் போய்விட்டது. மண்ணின் மைந்தர்களான நம் மரபார்ந்த பல விடயங்களுக்கு நாமே பின் ஆவணங்களைத் தேடியலைய வேண்டிய சோக நிலை ஏற்பட்டிருக்கிறது.

சுமார் 300 ஆண்டுகளுக்குமுன் பார்ப்பனன் உள்ளே நுழைந்தவுடனே தமிழில் உள்ள நூல்கள் அனைத்தையும் அப்படியே படியெடுத்து அவன் மரபார்ந்த நூலாக ஆக்கித் தமிழ்நூல்களை மறைத்தான்.

ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல் தமிழகத்துக்கு வந்து ஆய்வை மேற்கொண்ட போது தற்போது உலகப் புகழ்வாய்ந்த வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் நூலைப் பரிந்துரைக்க ஆள் இல்லை. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து தந்தை பெரியார் வந்து பார்ப்பனன் வேடம் கலைத்தார். திருக்குறள் மாநாடு நடத்தினார்.  

அதேபோல் ‘சங்க’த் தமிழ் என்றதற்கு ‘சங்கம்’ என்பதே தமிழ் இல்லை என்று எதிரிகள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். பின் அதற்கு நாம் பல சான்றுகளைக் காட்டவேண்டியதாகிவிட்டது.

இசையை, பரதக் கலையை, நாடகக் கலையை, ஔடத முறையை தமதென்று கூறி வாதிட்டார்கள். அதையும் போராடிக் காக்கவேண்டியதாகிவிட்டது.

தற்போது அவர்களே இன்னொரு குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார்கள். அதாவது பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் மறைமலையடிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டம் பொய்யானது என்றும், அந்தக் கூட்டம் நடைபெற்றபோது மறைமலையடிகள் தமிழ்நாட்டிலேயே இல்லை என்றும் ஊடகம் வாயிலாக தெரிவித்து தமிழர் மரபை திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

(பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த கூட்டத்தின் கையெழுத்து ஆவணத்தை கி.வ.ஜகந்தான் ஒரு ஊடகத்தில் கொடுத்து அது பிரசுரிக்கப் படாமல் காணடிக்கப்பட்டுவிட்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது. அதுதான் இவர்களுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. ஆனால் அவரே பல கூட்டங்களில் பேசிய குறிப்புகள், வாய்வழியாகச் சொல்லிய நபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.)

அதன் வலிமை வாய்ந்த குரலாகத் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முந்தைய அரசு சட்டசபையில் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய, தமிழக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட தை மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவது, கடைப்பிடிப்பது என்ற கொள்கையை அதே சட்டசபையில் எந்த போராட்டமோ, தமிழக எந்த அமைப்போ, மக்களோ போராடாத, கூக்குரலிடாதபோது தானே வலியவந்து தை முந்தைய அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்திருப்பது செய்த தவறையே திரும்பச் செய்யவைப்பது போலாகும் என்பதைக் கண்டித்து சென்னை பிரஸ் கிளப்பில் 26-04-2012ஆம் நாள் காலை 11 மணியளவில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தமிழ்ப் புத்தாண்டு காப்பு மாநாடு கூடிய விரைவில் நடத்துவது பற்றியும், அதன் ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது பற்றியும், தமிழ் ஆண்டுத் தொடக்கத்தை தற்போதைய தமிழக அரசு சித்திரையை முதலாக வைத்துத் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.  

இந்தச் சந்திப்பில் இறைக்குருவனார் தலைமையில் கி.த.பச்சையப்பன், முனைவர் அரணமுறுவல், இலக்குவனார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். குறிப்பிட்ட அளவில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை எடுத்துவைத்தார்கள். இக்கூட்டத்தில் இன்னும் பத்து நாளில் தமிழ் ஆண்டுக் காப்புக் குழுவுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதென்றும், இன்னும் மூன்று மாதத்தில் தமிழ் ஆண்டுக் காப்பு மாநாடு நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பில் தமிழகத்திலுள்ள உணர்வுள்ள தமிழ் அமைப்புகள் அனைவரும் தாங்களாகவே வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய தமிழாய்வறிஞர் இறைக்குருவனார், தற்போதைய அதிமுக அரசு சித்திரை மாதத்தைத் தமிழ் ஆண்டு தொடக்கமாக பலர் முன்பு வாழ்த்துச் சொன்னார்கள். அதனால் சித்திரை முதல் நாள் தமிழ் ஆண்டுத் தொடக்கம் என்கிறார். இதே அதிமுக அரசில் முன்பு எம்.ஜி.ஆர். தலைமையில் ஒரு மாநாட்டில் இனி தமிழ் ஆண்டு தை நாளில்தான் கொண்டாடப்படவேண்டும் என்று தீர்மானம் போட்டு நடத்தப்பட்டது. ஆனால் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா அவர் கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வினா எழுப்பியதோடு, ஏன் தை மாதத்தில் தமிழ்ஆண்டுப் பிறப்பு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கு தமிழர் மரபார்ந்த பல செய்திகளைத் தக்கச் சான்றோடு விளக்கிக் கூறி அரங்கை அதிரச்செய்தார்.

பின்பு பேசிய முனைவர் அரணமுறுவல், தை தமிழ் ஆண்டு தொடக்கமாக மாற்றியதற்கு தமிழக மக்களோ, தமிழ் அமைப்புகளோ போராடபோது அவர்களாகவே இந்த மாற்றத்தை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது, இந்த அறிவிப்பை மாற்றவில்லை யானால் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தொடர் அறப்போராட்டங்களை நடத்துவோம் எனத் தெரிவித்தார்.

அடுத்து பேசிய கி.த. பச்சையப்பன், தமிழகத்தை தமிழர் ஆளாததுதான் இந்த நிலைக்குக் காரணம். தமிழரென்றால் தமிழ் உணர்வு இருக்கும் என்றார்.

இறுதியாகப் பேசிய இலக்குவனார் தமிழ் ஆண்டு காப்புக்குழு நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.

கொஞ்சம் தாமதம் (நேரம் அல்ல காலம்) ஆனாலும் நல்ல தொடக்கம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு தமிழ் ஆண்டு காப்பு மாநாட்டுத் தொடக்கம் இங்கிருந்து ஆரம்பமாகிவிட்டது.

தமிழ் நாட்டில் தமிழ் அமைப்புகளுக்குப் பஞ்சமில்லை. தமிழனின் பண்பாட்டுக்கே பங்கம் நிகழும்போது நிச்சயமாக உருண்டோடும் நெல்லியாக இல்லாமல் அதிமானுக்கு அவ்வைப்பிராட்டி ஊட்டிய நெல்லிக்கனியாக ஒட்டுமொத்த இந்த மாநாட்டில் தமிழக அமைப்புகளும், தமிழக மக்களும் இணைவார்கள் என்ற நம்பிக்கை அங்கு குழுமியிருந்த அனைவர் கண்களிலும் தெரிந்தது.



Tuesday, February 21, 2012

பிப்பிரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாள்


பிப்பிரவரி 21-ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாள் என யுனெசுகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 2000ஆம் ஆண்டுத் தொடங்க இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.  உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் அந்த மொழிக்குரியவர்களும் தங்களின் தனித்தன்மையையும் தனி அடையாளத்தையும் பேணிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் 'தாய்மொழி நாள்' உருவாக்கப்பட்டது.

அனைத்துலகத் தாய்மொழி நாளாகப் 'பிப்பிரவரி 21'-ஐ தெரிவு செய்ததற்கு ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. 1952-இல் இந்த நாளில் அன்றைய கிழக்குப் பாக்கிசுதான் (இன்றைய வங்காளதேசம்) தலைநகரமாக இருந்த டாக்காவில் மொழிப் போராட்டம் வெடித்தது. வங்காள மொழியை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்தில் உயர்க்கல்வி மாணவர்கள் 4 பேர் சூடுபட்டு இறக்க நேரிட்டத்து. தாய்மொழிக்காக உயிர்நீத்த அந்த மாணவர்களின் நினைவாக இந்த நாள் உலகம் முழுவதும் நினைவுக் கூரப்படுகிறது. 

இந்த அனைத்துலகத் தாய்மொழி  நாளில் தமிழர்களாகிய நாம் நமது தாய்மொழியாம் தமிழ்மொழியை நினைந்துப் போற்றி, நம்முடைய தாய்மொழிக் கடமைகளை நிறைவாகச் செய்ய உறுதிகொள்ள வேண்டும். உலக இனங்கள் எல்லாம் தம்முடைய தாய்மொழியையும் பண்பாட்டு விழுமியங்களையும் மீட்டுக்கொள்ளவும் காத்துக்கொள்ளவும் முனைந்து செயல்படுவதை உணர்ந்துபார்த்து நாமும் அவ்வண்ணமே செயல்பட வேண்ட்டும். 

இல்லையேல், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு.. அல்லது அடுத்த நூற்றாண்டில் நமது தமிழ்மொழியானது வரலாற்றில் மட்டுமே வாழும் மொழியாக மாறிப்போய்விடலாம்; அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மொழியாக ஆகிப்போய்விடலாம்.

தமிழ்மொழி ஆளும் மொழியாக இருந்த நூற்றாண்டுகளை  வரலாற்றில்  கண்டிருக்கிறோம்; தமிழ் மக்களிடையே புழங்கும் மொழியாக இருப்பதைக் கண்டிருக்கிறோம்; புலம்பெயர்ந்து பரவிய மொழியாகக் கண்டிருக்கிறோம்;  பன்மொழிகட்கும் சொற்கடன் கொடுத்த மொழியாகக் கண்டிருக்கிறோம்.  இப்படியாகக் கடந்த நூற்றாண்டுகளைக் கடந்து வந்துவிட்ட  தமிழ்மொழி   இனிவரும் காலத்திலும் வாழும் மொழியாக தமிழ் மக்கள் வழக்கில்..  தமிழ் மக்கள் வீட்டில்..  தமிழ் மக்கள் நாவில் வாழ வேண்டடும்.

அதற்குப் பின்வருவனவற்றில் சிலவற்றையேனும் நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும்:-

1.குழந்தைக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம்.
2.குழந்தைகளுக்குத் தமிழ்க்கல்வி கற்றுக்கொடுப்போம்.
3.குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம்.
4.இல்லங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோம்.
5.இல்ல நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்திக் கொள்வோம்.
6.தமிழரிடம் தமிழில் பேசுவோம்.
7.தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவோம்.
8.தமிழினம் என்ற இன அடையாளத்தை மீட்டமைப்போம்.
9.தமிழ் இனத்தின் பெயரால் ஒன்றுபட்டு நிற்போம்.
10.நாம் தமிழர் என்று மார்தட்டி முழங்குவோம்.
11.தமிழனுக்குத் தமிழன் கைகொடுத்து உதவிடுவோம்.
12.தமிழிய நெறியில் குடும்பத்தை வழிநடத்துவோம்.
13.தமிழால் பூசித்து இறைமையை வழிபடுவோம்.
14.தமிழ் மொழி, இன, பண்பாட்டு, வரலாற்று அறிவு பெறுவோம்.
15.தமிழே மூச்சு, தமிழே உயிர், தமிழே வாழ்வு என வாழ முற்படுவோம்.
-சுப.நற்குணன்

Saturday, January 14, 2012

பொங்கல் 2012 - தமிழ்ப் புத்தாண்டு 2043

திருத்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள்;
திருவள்ளுவராண்டு 2043
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து.
 
 
தமிழ் தமிழாக வாழட்டும்;
தமிழர் தமிழராக வாழ்வோம்;
தமிழ்ப் புத்தாண்டு நன்நாளில்
உறுதி கொள்வோம் - உயர்வு பெறுவோம்.

அன்புடன்:- சுப.நற்குணன்
 
பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டுச்  சிறப்புக் கட்டுரைகள்:-
 
 
  

Saturday, December 31, 2011

மலேசியாவில் தமிழ் நாள்காட்டி - 2043

நாள்காட்டி தோற்றம்

 தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியத் திருநாட்டில் ஆறாவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிகரமாக வெளிவருகின்றது. இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது.

மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார். 2007 தொடங்கி இந்தத் தமிழ் நாள்காட்டி தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தமிழ் நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணி நாள்காட்டி வரலாற்றில் இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்தந்து குறிப்பிடலாம்.

2012 சனவரித் திங்கள் 14ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள். அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2043 ஆகும்.

தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில், ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. 

 

எல்லா நாள்காட்டிகளிலும் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், மாநில விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், விழா நாள்கள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன. 



நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்:-

1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்ணின் நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.
4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட, 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்கள் - மாவீரர்கள் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
6)வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட தமிழர்களின் வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.

9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.


10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.

உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.
இது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீட்டெடுக்கும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக்கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, மாதம், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.

இந்த நாள்காட்டியை அஞ்சல் வழியாகப் பெற்றுக்கொள்ள முடியும். மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கும், இந்த நாள்காட்டியை மக்களுக்குப் பரப்ப விரும்பும் அன்பர்களுக்கும் சிறப்புச் சலுகை விலையில் தரப்படும்.

  • நாள்காட்டி விலை: RM5.00 (ஐந்து ரிங்கிட்) மட்டுமே.
  • தொடர்புக்கு: தமிழியல் ஆய்வுக் களம் - Persatuan Pengajian Kesusasteraan Tamil, No.17, Lorong Merbah 2, Taman Merbah, 14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia.
  • கைப்பேசி: ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016) , சுப.நற்குணன் (6017-4643941)
  • மின்னஞ்சல்: vellumtamil@gmail.com
  @சுப.நற்குணன், மலேசியா
Blog Widget by LinkWithin